பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம் குறித்து ஜி.கே. மணி மோசடி, சூழ்ச்சி என குற்றச்சாட்டு.
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ ஜி.கே. மணி, “பாமகவின் நிரந்தரமான தலைமை அலுவலகம் என்பது தேனாம்பேட்டை முகவரியில் இருப்பது. ஆனால், நிரந்தர முகவரியை சூழ்ச்சி செய்து கபட நாடகம் நடத்தி மாற்றப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டதே மோசடியான செயல்” எனத் தெரிவித்துள்ளார்.
பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்து தற்போது இருவரும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். இதில் அன்புமணி, பாமகவின் தலைமை அலுவலகமாக சென்னை தி.நகர் அலுவலகம் செயல்படும் என அறிவித்து செயல்பட்டு வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 9ஆம் தேதி பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ‘பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா’ ஆகியோர் மேலும் ஓராண்டுக்கு பதவியில் நீடிப்பார்கள் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பினார்.
பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்புமணிக்கு உரிமை இல்லை என்றும், அவர் சாதாரண செயல் தலைவர் தான் என்றும் ராமதாஸ் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.
இதனால், பாமகவில் கடும் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியின் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு, அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும், அவர் தான் கட்சியின் தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதாக, தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை காட்டினார்.
இந்த விவகாரம் நேற்று முதல் பாமகவில் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரத்தில் ராமதாஸ் தரப்பு பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தேர்தல் ஆணையத்தின் கடிதத்தைக் காட்டி மக்களை நம்பவைக்கும் செய்தியாகவும், அரசியலில் திசை திருப்பும் செயலாகவும் நேற்று (15ஆம் தேதி) ஒரு செயல் நடைபெற்றது. அந்தச் செயலை திட்டமிட்டு செய்த மோசடி என்றும்கூட சொல்லலாம்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கி அறிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில் பாமகவின் தலைவர் என மட்டும் குறிப்பிட்டு, தலைமை அலுவலக முகவரியாக தி.நகர் குறிப்பிடப்பட்டுள்ளது