திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு 28.09.2025 அன்று பாளையங்கோட்டை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களில் உள்ள 47 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு துறைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2A பதவிகளுக்கான தேர்வு, வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் www.tnpsc.gov.in, www.tnpscexams.in -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். குறிப்பாக தேர்வர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவு தளத்தின் (One Time Registration) வழியாக உள்நுழைய வேண்டும். அதில், விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியைப் (Date of Birth) பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த தேர்வு 28.09.2025 அன்று பாளையங்கோட்டை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களில் உள்ள 47 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை 13,621 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
இந்த தேர்வானது 28.09.2025 அன்று காலை 09.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணியளவில் முடிவடையும். மேற்படி தேர்விற்கு கலந்து கொள்ளும் தேர்வர்கள் காலை 08.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த தேர்விற்கு காலை 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்து தேர்வர்கள் கடைபிடிக்குமாறு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.