கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடக்கோரி தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கரூரில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு வழிவகுத்த காரணங்கள் மற்றும் சமூக விரோதிகளின் தொடர்பு குறித்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விஜயின் தலைமைப் பண்பு குறித்த உயர்நீதிமன்ற கருத்துகளை நீக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Read Time:2 Minute, 12 Second