மயிலாடுதுறையை அடுத்த ஆறுபாதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் துபாயில் வேலைக்காக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சென்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை கொடுக்காமல் அந்நிறுவனம் மிகவும் கடினமான கட்டிட பணி கொடுக்கப்பட்டதால், நோய்வாய்ப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டார். அந்நிலையில் ஒதுக்கப்பட்ட பணியையேத் தருவதற்கு மேலும் ஒன்றை லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று அந்நிறுவனமே கூறியதால் அதற்கு வழியில்லாததால், அந்த நிறுவனத்தில் இருந்து ஈவு இரக்கமின்றி விரட்டப்பட்டார். வேலையை இழந்த மயிலாடுதுறை ஆறுபாதி ஆசைத்தம்பி துபாய் வீதிகளில் சுற்றி திரிந்தவுடன், தனது மனைவிக்கு என்னை மறந்து விடுமாறும் என்னால் அவர்கள் கேட்கின்ற அளவுக்கு பணம் கொடுக்கவும் முடியாது என்றும், இல்லையென்றால் நீ உடனே 2 லட்சம் பணம் அனுப்ப வேண்டும் என்றும் கூறிவிட்டு செல்போன் தொடர்பில் இருந்து விலகிவிட்டார். 20 நாட்களுக்கு மேலாகியும் தொடர்பு எதுவும் இல்லாமல், தனது கணவர் குறித்த சரியான தகவலும் கிடைக்காததால், மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உதவியை, ஆசை தம்பியின் மனைவி ஞானாம்பாள் மற்றும் அவரது குடும்பத்தினர் அணுகினார்கள். உடனடியாக சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரா பாண்டியன் அவர்களின் ஆலோசனையின்படி, இது குறித்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.வழக்கறிஞர் சுதா அவர்களை தொடர்பு கொண்டு துபாயில் காணாமல் போன மயிலாடுதுறை சார்ந்த இளைஞர் ஆசைத்தம்பியை மீட்டுத் தர உதவிடுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் டெல்லியில் இருந்த காரணத்தினால் உடனடியாக வெளியூரவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆசைத்தம்பியின் விபரங்களை தெரிவித்து, அவரை மீட்டெடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். அதன் விளைவாக துபாய் காவல் துறையினர், உணவின்றி உறக்கமின்றி சுற்றித் திரிந்த ஆசைத்தம்பியை கண்டு பிடித்து, எமர்ஜென்சி பாஸ்போர்ட் கொடுத்து விமான மூலம் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஆசைதம்பி ஹைதராபாத் வந்து அங்கிருந்து ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து சேர்ந்தார். கண்ணீர் மல்க குடும்பத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சுதா அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மற்றும் குருசங்கர், பாமக மண்டல செயலாளர் எஸ்.ஏ.ஐயப்பன், சர்க்கரை ஆலை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கதிரவன் ஆகியோருக்கும் ஆசைத்தம்பி ஞானாம்பாள் தம்பதியினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தம் தெரிவிக்கையில்.. வேலையில்லாத தமிழக இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைக்கு செல்வது மிகவும் கஷ்டமாக உள்ளது. வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகள் லாப நோக்கில் மட்டுமே சிந்திக்கிறார்களே தவிர, இந்த வேலையை இந்த இளைஞன் செய்ய முடியுமா என்று யோசிக்காமல், இங்கிருந்து அனுப்பிவிட்டு அதன் பிறகு அது குறித்து எவ்வித கவலையும் படாமல் இருப்பதை காண முடிகின்றது. வளர்ந்த தமிழகத்தில் இப்படிப்பட்ட தவறான செய்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் நிறுவனங்கள் மீது தனி கவனம் செலுத்தி அரசும் தொழிலாளர் துறையும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து வெளிநாட்டுக்கு அனுப்பும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அதனை தடை செய்ய வேண்டும். இளைஞர்களும் உஷாராக இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கென்றே அவர்களுக்கு வழிகாட்டி விவரங்களை அளிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் அலுவலர்களை சென்னையில் நேரில் சந்தித்து தாங்கள் செல்லும் நிறுவனம் நல்ல நிறுவனமா அதில் சேரலாமா என்பதை ஆய்ந்து அறிந்து உறுதி செய்த பிறகு வேலைக்கு செல்ல வேண்டும். கஷ்டப்பட்டு கடன் பெற்று வெளிநாடு செல்லும் இளைஞர்கள்இப்படி மீண்டும் பிரச்சனையை உருவாக்கி குடும்பத்தினருக்கு பெருத்த சங்கடத்தை உருவாக்குவதில் இருந்து விழிப்புணர்வோடு இனி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.