திருச்சிற்றக்கூடம் ஸ்ரீ கண்ணபிரான் பேரவை சார்பில் முதலாம் ஆண்டு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு சிறப்பாக நடைபெற்றது
சிதம்பரம், ஜூன் 30:
திருச்சிற்றக்கூடம் ஸ்ரீ கண்ணபிரான் பேரவை சார்பில் முதலாம் ஆண்டு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு சிதம்பரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிதம்பரம் கம்யூனிட்டி ஹாலில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு பேராசிரியர் கே. பத்மநாபன் தலைமை தாங்கினார்.
முனைவர் கோகுலாச்சாரி (ஆலய தரிசனம், புவனகிரி) முன்னிலை வகித்தார். உபன்யாச திலகம், பிரவசன திலகம் டாக்டர் பூவே. வெங்கடேஷ் சுவாமிகள் மற்றும் முனைவர் மதுரை ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றி, ஸ்ரீ வைஷ்ணவ சமயத்தின் சிறப்புகள், ஆன்மிக நெறிகள் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் குறித்து பக்தர்களுக்கு விளக்கமளித்தனர்.
முன்னதாக, டாக்டர் கே.கே. ஜானகிராமன் வரவேற்புரையாற்றி, மாநாட்டின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்த மாநாட்டில் கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 600 முதல் 700 பேர் வரை கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சி முழுவதும் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்றது.