நாளை முதல் தமிழக முழுவதும் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் கட்சித் தொண்டர்களை சந்திக்கவுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நாளை (ஜூலை 25, 2025), தனது தந்தையும் கட்சி நிறுவனருமான டாக்டர் ராமதாஸின் பிறந்தநாளிலேயே “உரிமை மீட்பு பயணம்” என்ற பெயரில் தமிழகம் தழுவிய பயணத்தைத் தொடங்கவுள்ளார். இந்தப் பயணத்திற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காவல்துறைத் தலைவர் (டிஜிபி) அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பாமகவில் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக உட்கட்சியில் குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில் ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ஆம் நாள் மாலை தமிழக முழுவதும் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் சென்னையை அடுத்த திருப்போரூரில் புதிய பயணத்தை தொடங்கி கட்சித் தொண்டர்களை சந்திக்கவுள்ளார். “பாமக தலைவர் அன்புமணியின் உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைப்பயணம்” என்ற பெயரில் தொடங்கப்படும் இந்தப் பயணம், நாளை மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் ஆரம்பமாகிறது. தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக 100 நாட்கள் நீண்ட தூரம் பயணிக்கும் இந்தப் பயணம், வரும் நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது. இந்தப் பயணத்திற்கான இலச்சினையும் ஏற்கனவே வெளியிடப்பட்டு, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.