இரான் மீது சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. இரான் உச்ச தலைவர் காமனெயி, ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்பட 48 முக்கிய தலைவர்களை கொன்றுவிட்டதாகவும், தங்களது நோக்கம் நிறைவேறும் வரை நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இரானில் முதல் 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி மையங்களை தாக்க பயன்படுத்திய பி-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளத்தை தாக்கியதாகவும் அந்த மையம் கூறியுள்ளது. இஸ்ரேலும் இரான் மீதான தனது தாக்குதலை தொடர்கிறது.
அதேநேரத்தில், இரானும் பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. சில தளபதிகளை இழந்தாலும் எங்கள் திறன் குறையவில்லை என்று இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக கூறியுள்ள இரான், அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
முதல் 24 மணி நேரத்தில் 1,000 இலக்குகள் மீது தாக்குதல் – அமெரிக்கா
ஆபரேஷன் எபிக் ஃப்யூரியின் முதல் 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட இரானிய இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம், டிரோன்கள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அது பட்டியலிட்டிருந்தது.
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கூட்டுத் தலைமையகம் உள்ளிட்ட தாக்குதலுக்குள்ளான இரானிய இலக்குகளையும் இது பட்டியலிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) கருத்துகளை இது எதிரொலிக்கிறது, நடவடிக்கையின் முதல் நாள் “மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை” செய்ததாக இஸ்ரேல் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது.
‘நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதல் தொடரும்’

டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “போர் நடவடிக்கைகள் முழு பலத்துடன் தொடரும். எங்கள் அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை தொடரும்.” என்று கூறியுள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக இன்னும் அதிகமான அமெரிக்க உயிரிழப்புகள் இருக்கும். அதை தவிர்க்க இயலாது. அவர்களின் மரணத்திற்கு அமெரிக்கா பழிவாங்கும். நாகரிகத்திற்கு எதிராகப் போரை நடத்திய பயங்கரவாதிகளுக்கு மிகவும் தண்டனைக்குரிய அடியை வழங்கும்” என்று அவர் தெரிவித்தார்.
“இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர், போலீசார் ஆயுதங்களை கீழே போட்டால் உயிர் தப்பலாம் அல்லது நிச்சயம் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அது நிச்சய மரணம்” என்றார் அவர்.
“அணு ஆயுதங்களுடன் கூடிய இரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை” ஒழிக்க இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் “சரியானவை” மற்றும் “அவசியமானவை” என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்த சகிக்க முடியாத அச்சுறுத்தல்கள் இனி தொடராது” என்று டிரம்ப் தெரிவித்தார்.
“சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து இரானிய தேசபக்தர்களும் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், தைரியமாக இருக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன்,” என்று டிரம்ப் கூறினார்.
“தைரியமாக இருங்கள், வீரத்துடன் இருங்கள், உங்கள் நாட்டைத் திரும்பப் பெறுங்கள். அமெரிக்கா உங்களுடன் உள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.
