திருச்சியில் பட்டப்பகலில் காவலர் குடியிருப்புக்குள் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருச்சியில் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். 28 வயதான இவர், புத்தூரில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்துள்ளார். தாமரைச் செல்வனுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், காலை 8.30 மணியளவில் தாமரைச்செல்வன் தனது இருச்சக்கர வானத்தில் அலுவலகம் நோக்கி சென்றுள்ளார்.
செடல் மாரியம்மன் கோவில் அருகே, அவரின் பைக்கிற்கு முன்பும், பின்பும், இரு பைக்குகளில் 5 பேர் வந்துள்ளனர். அதில், ஒரு பைக் தாமரைச்செல்வனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் தாமரைசெல்வன் கீழே விழுந்ததும், திடீரென 5 பேர் கும்பல் அரிவாள், கத்தி உட்பட பயங்கர ஆயுதங்களுடன் சுத்து போட்டுள்ளது. ஆபத்தை உணர்ந்து தாமரைச்செல்வன் சுதாகரிப்பதற்குள் அவரின் மீது பலமாக வெட்டு விழுந்துள்ளது.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள காவலர் குடியிருப்புக்குள் ஓடியுள்ளார். காவலர் குடியுருப்புக்குள் சென்ற போதும் கொலைவெறிக் கும்பல் அவரை விடாமல் துரத்தியுள்ளது- அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ. செல்வராஜ் என்பவரின் வீட்டிற்குள் ஓடி தாமரைச் செல்வன் ஒளிந்துள்ளார். அவரை தேடிக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்த 5 பேரும், சரமாரியாக வெட்டிச் சாய்துள்ளனர்.
இதில், நிலைகுலைந்த தாமரைச் செல்வன் அங்கேயே சரிந்து விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட காவலர்கள், கொலைகார கும்பலை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், நிராயுதபாணியாக இருந்த காவலர்களால், கத்தியும், அரிவாளுடனும் இருந்த கும்பலை தடுத்து நிறுத்த முடியாமல் போயுள்ளது- இருந்த போதும், கீழே கிடந்த கற்களை ஆயுமாக்கிக் கொண்டு அவர்களை நோக்கி எரிந்ததும் தப்பியோட முயற்சித்துள்ளனர்.
அதில், இளமாறன் என்பவரை மட்டும் போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பாலக்கரை போலீசார், தாமரைச் செல்வனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்டிவுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிக்கிய இளமாறனிடம் விசாரணை மேற்கொண்டனர்.