பெரும் பரபரப்பிற்கு இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
பெரும் பரபரப்பிற்கு இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
துபாயில் நடைபெற்ற 6 ஆவது லீக் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரான பர்ஹான் 40 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர். 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இதனால், 15 புள்ளி 5 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு, 131 ரன்கள் எடுத்து, இந்திய அணி வெற்றிக்கொடி நாட்டியது.
அதிரடியாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் 47 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் பேசிய சூர்யகுமார் யாதவ், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களின் பக்கம் எப்போதும் தாங்கள் நிற்போம் என்றும், இந்த வெற்றியை இந்திய பாதுகாப்பு படைக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார். இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. டாஸ் போடும் போது, இரு அணி கேப்டன்களும் கை கொடுக்கவில்லை. போட்டி முடிந்த பிறகும் இரண்டு அணி வீரர்களும் கை குலுக்கவில்லை. இதனிடையே, பாகிஸ்தான் தேசிய கீதம் ஒலிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போது, திடீரென்று டெஷர் மற்றும் ஜேசன் டெருலோவின் ‘ஜிலேபி பேபி’ பாடல் ஒலித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.