கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 4 லட்சத்து 20 ஆயிரத்து 709 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
இதில் முதல் தவணையாக 3 லட்சத்து 54 ஆயிரத்து 388 பேரும், 2-வது தவணையாக 66 ஆயிரத்து 321 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 287 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 67 ஆயிரத்து 322 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கோவாக்சின் தடுப்பூசி இல்லை. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் செலுத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் 4,088 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசி போட அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் பொதுமக்கள் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.நேற்று முதல் கோவிஷீல்டு தடுப்பூசியும் இருப்பு இல்லை. இதனால் கோவிஷீல்டும் போடவில்லை. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் நேற்று 2 தடுப்பூசியும் இல்லை என்பதால், மைதானத்தின் வெளியே தடுப்பூசி இல்லை என்று அறிவிப்பு வைக்கப்பட்டு இருந்தது.
இதை அறியாமல் பொதுமக்கள் வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல் பல்வேறு இடங்களில் இதே நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் ஏற்கனவே இருப்பு வைத்திருந்த கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று மாலை வரை 648 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 7 ஆயிரம் கோவிஷீல்டு மட்டும் இருப்பு இருந்தது. அதை கடந்த 2 நாட்களாக போட்டு வருகிறோம்.
தற்போது அதுவும் முடிந்து விட்டது. 2 தடுப்பூசிகளையும் கேட்டு இருக்கிறோம். சென்னையில் இருந்து வந்தவுடன் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். நாளைக்கு (இன்று) வர வாய்ப்புள்ளது என்றார்