அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி- இயல்பிலிருந்து சற்று குறைந்து இருக்கக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
வெப்பநிலை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி- இயல்பிலிருந்து சற்று குறைந்து இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும், கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.