நான் எந்த மேடையிலும் விஜய்யை விமர்சித்தது கிடையாது.. ஏனென்றால் அவர் திமுகவிற்கு வந்துவிடுவார்.. அப்போது நாம் தான் அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில் கரு பழனியப்பன் பேசியுள்ளார்.
சிவகங்கையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன், கரு பழனியப்பன், திமுக நிர்வாகிகள் உள்பட்ட தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் கரு பழனியப்பன் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 5 லட்சம் பேர் இணைந்து இருக்கிறார்கள். இன்று புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் இந்தியை எதிர்த்து தான் அரசியல் செய்கிறார். இதே அரசியலை தான் நாங்களும் செய்கிறோம். இதற்கு விஜய் திமுகவில் இணைந்துவிடலாமே.. புதிய பொருட்கள் விற்றால் தான் தனிக்கடை போட வேண்டும். நான் எந்த மேடையிலும் விஜய்யை விமர்சித்தது கிடையாது.. ஏனென்றால் அவர் திமுகவிற்கு வந்துவிடுவார்.. அப்போது நாம் தான் அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும்… இவ்வாறு அவர் கூறினார். இதைக் கேட்ட அமைச்சர் பெரியகருப்பன், கூட்டணி கட்சித் தலைவரான கமல்ஹாசன் பெயரை சொல்லி அதே கருத்தை பேசியது பேசுபொருளாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. அந்த தேர்தலில் திமுகவை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன், தேர்தல் தோல்விக்கு பிறகு திமுகவுடன் கூட்டணி அமைத்தார். திமுக சார்பில் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனை சூசகமாக குறிப்பிட்டு விஜய்யை கரு பழனியப்பன் விமர்சித்துள்ளார்.