சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கவுன்சிலரின் கணவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
திருநின்றவூர் கவுன்சிலராக கோமதி இருந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோமதியும், ஸ்டீபன்ராஜும் காதலித்து திருமணம் செய்தனர். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு 4 குழந்தைகள் இருக்கின்றன. ஆனால், கோமதி திருமணம் மீறிய உறவில் இருந்ததாக ஸ்டீபன்ராஜ் குற்றம்சாட்டி வந்துள்ளார்.
நேற்றிரவு திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியில் உள்ள ஜெயராம் நகரில் தனது ஆண் நண்பருடன் கோமதி பேசிக்கொண்டிருந்திருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோமதியின் கணவர் ஸ்டீபன்ராஜ், கோமதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பிரச்சனை தீவிரமடைவதை உணர்ந்த ஆண் நண்பர் அந்த இடத்திலிருந்து நழுவியிருக்கிறார். பின்னர் கோமதிக்கும், ஸ்டீபன்ராஜுக்கும் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
இதனையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கோமதியை சரமாரியாக ஸ்டீபன்ராஜ் தாக்கியுள்ளார். இதில் கோமதியின் கை துண்டிாகியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கோமதி சம்பவ இடத்திலேயே சரித்து விழுந்து துடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் ஸ்டீபன்ராஜ் போலீசில் சரணடைந்துள்ளார். ஸ்டீபன்ராஜை கைது செய்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.