0 0
Read Time:2 Minute, 33 Second

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், மாதானம், பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், கொள்ளிடம் உதவி இயக்குனர் எழில்ராஜா மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பழையபாளையம் கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பருத்தி பயிரை பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு வேளாண் இணை இயக்குனர் சேகர் கூறுகையில், ‘கொள்ளிடம் வட்டாரத்தில் பருத்தி 850 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இது 25 முதல் 50 நாள் வயதுடைய பயிர்களாக உள்ளன. தற்சமயம் வெயிலின் அளவு அதிகமாக உள்ளதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் அல்லது இமிடாகுளோப்ரைடு ஆகியவற்றை பயன்படுத்தலாம். மஞ்சள் நிற ஒட்டும் அட்டை வைத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். நுண்ணூட்ட பற்றாக்குறையால் இலை சிவந்து காணப்பட்டால் 5 சதவீதம் மெக்னீசியம் சல்பேட்டை இலை வழியாக தெளித்து சரிசெய்யலாம்.

சிங்க் சல்பேட் பற்றாக்குறை உள்ள வயல்களுக்கு 45, 60 மற்றும் 75-ம் நாட்களில் சிங்க்சல்பேட்டை இலை வழியாக தெளித்து சரி செய்யலாம். அதிக மகசூல் பெற 2 சதவீதம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் ஒரு சதவீதம் யூரியாவை காய் உருவாகும் பருவத்தில் தெளிக்கலாம்.

மேலும் உயர் விளைச்சல் பெறவும், சப்பை உதிர்வதை தடுக்கவும், அதிக பக்க கிளைகள் உருவாகவும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள பருத்தி நுண்ணூட்டத்தை 50 சதவீத மானிய விலையில் பெற்று பருத்தி பயிரில் தெளித்து பயன்பெறலாம்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %