போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் இரு மகன்களின் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பிரபலமான ஜவுளிக் கடை போத்தீஸ். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ளது போத்தீஸ். விளம்பரங்கள் மற்றும் மார்க்கெட்டிங் உத்திகளில் புதுமை காட்டி ஏராளமான வாடிக்கையாளர்களைக் கவர்ந்த நிறுவனமான போத்தீஸ், பொதுமக்கள் மத்தியிலும் பிரபலமான கடையாக திகழ்ந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நெல்லை, சென்னை, மதுரை எனப் படிப்படியாக ஷோ ரூம்களைத் திறந்தது போத்தீஸ்.
1977ல் போத்தீஸின் நிறுவனரான போத்தி மூப்பனார் ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல்முறையாக போத்தீஸ் கடையைத் துவங்கினார். 98 ஆண்டுக் கால வரலாற்றுப் பின்னணியுடன் தற்போது நான்காம் தலைமுறையைக் கண்டுள்ள போத்தீஸ் தற்போதைய சூழலில் தமிழகத்தின் முன்னணி நகரங்கள் அனைத்திலும் கிளைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் தான், போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் இரு மகன்களின் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) நீலாங்கரையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையான போத்தீஸ் உரிமையாளரின் மகன்கள் போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகிய இருவரின் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் வீட்டில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் குழு என இரு மகன்கள் வீட்டில் 12 வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை சுமார் 7:20 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.