TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருப்பதால் பிற்பகல் முதல் இணையதளம் முடங்கியது. இதனையடுத்து விண்ணப்பதாரர்களால் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யமுடியாமல் அவதிக்குள்ளாகிவந்தனர். எனவே தற்போது டெட் தேர்வு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிகளில் தொடர தகுதி தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. அதேசமயம், 2025ஆம் ஆண்டுக்கான டெட் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியிட்டது.
மேலும், டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு வெளியான ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இன்று (செப்டம்பர் 8ஆம் தேதி) வரை விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றே (8ஆம் தேதி) கடைசி நாள் ஆகும். விண்ணப்பம் திருத்த கால அவகாசம் செப்டம்பர் 9 மற்றும் 11-ம் ஆகிய தேதிகளில் வழங்கப்படும். இதற்கான முதல் தாள் தேர்வு நவம்பர் 15 தேதியும், இரண்டாம் தாள் தேர்வு நவம்பர் 16 தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது.
விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் தொடர்ந்து காலை முதல் அதிகப்படியான ஆசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் இன்று பிற்பகல் இணையதளம் முடங்கி உள்ளது.
இன்னும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடிய சூழல் உள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கால அளவை நீட்டித்து தர வேண்டும் என டெட் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில் டெட் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றுடன் முடிவடைய இருந்ததை வரும் 10ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.