கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேனில் ரயில் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தைச் சேர்ந்தவர் ரயில்வே கேட் கீப்பராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் நேற்று தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டாலும், சம்பவம் நிகழ்ந்த அந்த குறிப்பிட்ட பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக இருந்த பங்கஜ் சர்மாவின் கவனக்குறைவே காரணம் என்று கூறப்பட்டது. விபத்தை அறிந்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பங்கஜ் சர்மாவை சரமாரியாக தாக்கினர். இந்த விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்தோடு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வடமாநில நபர் மொழி புரியாமல் விபத்துக்கு காரணமானதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். “கடலூரில் இருந்து எல்லா பகுதிகளிலும் வடமாநிலத்தவர்களே கேட் கீப்பர்களாக உள்ளனர். ஏன் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் இல்லையா?” என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், செம்மங்குப்பம் பகுதிக்கு புதிய ரயில்வே கேட் கீப்பராக தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரின் பணி அனுபவம் 2 ஆண்டுகள். ரயில்வே விதிகளை பின்பற்றி கவனமுடன் பணியாற்றுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாட்டில் நியமித்தது சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, இந்த கோர விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தர இருக்கிறது. முதல்கட்டமாக இந்த விசாரணைக் குழுவினர் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் டிரைவ சங்கர், ரயில்வே அதிகாரிகள் உள்பட 13 பேர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.