முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அப்போது, அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுநர் தாமதிப்பதாக கூறி, ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல, அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் தன்னையும் விடுதலை செய்ய கோரி ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நளினி தடா சட்டப்பிரிவில் தண்டிக்கப்பட்டாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக சிறப்பு நீதிமன்றத்தின் அசல் தீர்ப்பை சமர்ப்பிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீசுவர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும், இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தெரிவித்தார். மேலும், அரசியல் சாசனத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் உயர் நீதிமன்றம் அதை சட்டவிரோதம் என அறிவிக்கலாம் எனவும், இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் தெரிவிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் இந்த விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ‘‘காந்தி படம் மாற்றப்படாது’ – ரிசவர் வங்கி’
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தை போல், விடுதலை செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அதற்கு உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அப்போது வாதிட்ட நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், விடுதலை செய்யக் கோரவில்லை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிட கோருவதாகவும், அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் என அவர் தெரிவித்தார்.