சிவகங்கை: “போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்சென்ற மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் கடும் சித்திரவதைக்கு ஆளானதற்கான அடையாளங்கள் அவரது உடலில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்குமார் உடல் முழுவதும் பல்வேறு இடங்களிலும் காயங்கள் இருந்ததாகவும், உட்புற உறுப்புகளிலும் பலவிதமான காயங்கள் காரணமாக, ரத்தக் கசிவு ஏற்பட்டு அவை அவரது மரணத்துக்கு காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகளாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகத்தின் பேரில் அஜித் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, நகை திருடு போன காரை யார் பார்க்கிங் செய்தது என பலமுறை கேட்டபோது, அஜித் குமார் மாறி மாறி 3 பேரின் பெயர்களை சொன்னதாக கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரையும் அழைத்து விசாரித்த போது, அவர்கள் யாரும் காரை பார்க் செய்யவில்லை என தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித் குமாரின் தம்பி நவீன் குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது அஜித் திருடியதை ஒப்புக்கொண்டதாகவும், திருடிய நகைகளை கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்துள்ளதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு சென்று போலீசார் தேடியபோது நகை கிடைக்கவில்லை என போலீசார் எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளனர்.
பின்னர், போலீசாரிடம் இருந்து தப்பி ஓட அஜித் குமார் முயன்றபோது அவர் கீழே விழுந்ததில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கும் அங்கிருந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், அதன் பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. ஆனால், செல்லும் வழியிலேயே அஜித் குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை திங்கட்கிழமை (ஜூன் 30) இரவு கிடைத்தது. அதன் அடிப்படையில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 5 போலீசார் மீதும் தற்போது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.