தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உப்பனாறு, தென்பாதி, புறவழிச்சாலை, சூரக்காடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி கூட்டுறவு சார்பதிவாளர் செல்வராணி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சீர்காழியை நோக்கி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை வீடியோ கேமராவில் பதிவு செய்து வருகின்றனர்.