மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பொறையாத்தான் கடைமடை வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் மூலம், பொறையார் முதல் தரங்கம்பாடி வரையிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடியிருப்புகளின் பிரதான நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. பொறையாத்தான் வாய்காலில் நல்ல நீரை சேமிக்கவும், மழைக்காலத்தில் உபரி நீர் வெளியேறவும் கடல்நீர் உட்புகுவதை தடுக்கவும் தரங்கம்பாடி அருகே பொறையாத்தான் கடைமடை பகுதியில் கதவணை அமைந்துள்ளது.

இந்த கதவணை கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து கடல் நீர் உட்புக தொடங்கியது. தற்போது தரங்கம்பாடியில் இருந்து பொறையாறு வரை இரண்டு கிலோ மீட்டர் வரை கடல் நீர் உட்புகுந்து விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பாக பொறையாத்தான் கதவணையை சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.