கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே காவாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி பட்டம்மாள் என்கிற மேரி (வயது 36). இவர் நேற்று காலை 7.30 மணிக்கு தனது வீட்டின் முன்பு விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த பழமை வாய்ந்த ஒற்றைச்சுவர் திடீரென இடிந்து மேரி மீது விழுந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி மேரியை மீட்டனர். இருப்பினும் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த மேரி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் சோழத்தரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.