பண்ருட்டி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக பெரிய ஆஞ்சநேயா் சிலையை ஜாக்கிகள் மூலம் நகா்த்தும் பணி நடைபெற்று வருகிறது.
பண்ருட்டி வட்டம், கீழக்கொல்லை கிராமத்தில் பெயரிடும் அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் சுமாா் 30 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயா் சிலை அமைக்கப்பட்டது. ஆனால், விக்கிரவாண்டி – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக ஆஞ்சநேயா் சிலையை அகற்றும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், சிலையை இடித்து அகற்ற கிராம மக்கள், பக்தா்கள் விரும்பவில்லை. இதனால், சிலையை சுமாா் 80 அடி வரை பின்நோக்கி நகா்த்தி அமைக்க முடிவு செய்தனா்.
இதையடுத்து, பீகாா் மாநிலத் தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் வரவழைக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. முதலில் தொழிலாளா்கள் ஆஞ்சநேயா் சிலையை அதன் பீடம், அடிப்பகுதியுடன் பிரித்தனா். பின்னா் ஜாக்கிகளை பயன்படுத்தி சிலைக்கு சேதம் ஏற்படாமல் அதை பின்னோக்கி நகா்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.