அங்காரா: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலில் துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு உதவினார். இதையடுத்து துருக்கி அதிபர் எர்டோகனை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேரில் சந்தித்து நன்றி கூறினார். அதன்பிறகு இரு தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எர்டோகன் சொன்ன வார்த்தை இந்தியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை பந்தாடியது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் நம்மை தாக்க தொடங்கியது.
இருநாடுகள் இடையே சண்டை வெடித்தது. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளை நம் படை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தன. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்கள் வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டது. அதோடு நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழித்தது. நம் நாட்டின் பதிலடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரண் அடைந்தது. பேச்சு வார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு துருக்கி பெரியளவில் உதவியது. துருக்கி நாட்டின் ட்ரோன்களை தான் நம்மை தாக்க பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்த ட்ரோன்களை துருக்கி ஆபரேட்டர்கள் தான் பாகிஸ்தானில் இருந்து இயக்கி உள்ளனர். மேலும் துருக்கி நம் நாட்டின் தாக்குதலை கண்டித்ததோடு, பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று அறிவித்தது. இதனை துருக்கி அதிபர் தையிப் எர்டோகனே நேரடியாக அறிவித்து இருந்தார்.
இதையடுத்து துருக்கியை நம் நாட்டு வர்த்தகர்கள், சுற்றுலா செல்லும் மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இது துருக்கிக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. இந்நிலையில் தான் துருக்கியின் உதவிக்கு நன்றி சொல்ல பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துருக்கிக்கு சென்றார். துருக்கியின் இஸ்தான்புல்லியில் அதிபர் எர்டோகனை சந்தித்து ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார். மேலும் இருநாடுகள் இடையேயான உறவை பலப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் துருக்கி அதிபர் எர்டோகன், அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் பிடன், பாதகாப்புத்துறை அமைச்சர் யாசர் குலேர், உளவுத்தறை தலைவர் இப்ராஹிம் காலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது பாகிஸ்தானுக்கு என்றைக்கும் பக்கப்பலமாக இருப்போம் என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வர்த்தகம், பாதுகாப்பு துறை, உளவுத்தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் இன்னும் இருநாடுகளும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் மண்டையை அசைத்து ஓகே சொல்லி உள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து விடுகிறது. இதன்மூலம் பாகிஸ்தான் நம்மை சீண்டி வருகிறது. இப்படியான சூழலில் பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி உளவு தகவல்களையும் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் உளவுப்பிரிவு என்பது மிகவும் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் ராணுவத்தை போல் உளவுப்பிரிவும் வீக்காக தான் இருக்கிறது. இந்த 2 பிரிவுகளிலும் பாகிஸ்தானால் நம் நாட்டின் அருகே கூட வர முடியாது. இதனால் தான் உளவு தகவல்களை பரிமாறுவதில் துருக்கியிடம் உதவி கேட்டு கையேந்தி இருக்கிறது. இது நம் நாட்டுக்கு தலைவலியாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் துருக்கி, பாகிஸ்தானை விட உளவுப்பிரிவில் நம் நாடு சக்தி மிக்கதாக உள்ளது. இதனால் இருநாடுகள் இணைந்தாலும் கூட அவர்களின் சதிவேலைகளை நம் நாடு வெற்றிகரமாக முறியடிக்கும் என்பதில் ஐயமில்லை.