பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ இன்று (மே 11) நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வந்தன. இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே, சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கான அறிவுறுத்தல்களை காவல்துறை அண்மையில் வெளியிட்டிருந்தது.
மேலும், இந்த மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் வருகை தருமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரைச் சாலையில் அக்கரை சந்திப்பில் இருந்து மாமல்லபுரம் செல்வதற்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் அக்கரை சந்திப்பில் இருந்து கே.கே.சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று அங்கிருந்து ராஜீவ் காந்தி சாலை வழியாக கேளம்பாக்கம், கோவளம் சென்று கிழக்கு கடற்கரைச் சாலையை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.