”சமத்துவத்தை வலியுறுத்தும் படம் மாமன்னன் “ என மாரி செல்வராஜை நேரில் அழைத்து நடிகர் ரஜினி பாராட்டியுள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படமாக அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் கடந்த மாதம் ஜூன் 29-ம் தேதி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மாமன்னன் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநருக்கு மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி பரிசாக வழங்கினார்.
இந்த படத்திற்கு திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் தெரிவித்துள்ளதாவது..
“ மாமன்னனை பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு என் இதயத்திலிருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ” என குறிப்பிட்டுள்ளார்.